Earn Money - பணம் சம்பாதிக்க

சனி, 31 ஜனவரி, 2009

பைபிள்

இருக்க வேண்டியது: தூய்மை, நீதி, நேர்மை.
ஆள வேண்டியது: கோபம், நாக்கு, நடத்தை.
பெற வேண்டியது: அன்பு, தைரியம், மென்மை.
கொடுக்க வேண்டியது: இல்லாதவருக்கு ஈதல், துன்பத்திற்கு ஆறுதல், தகுதிக்குப் பாராட்டு.
அடைய வேண்டியது: ஆன்ம சுத்தம், முயற்சி, உள்ள மகிழ்வு.
தவிர்க்க வேண்டியது: துன்பம் செய்தல், முரட்டுத்தனம், நன்றி இல்லாமை.

- பைபிள்

நபிகள்

ஒரு மனிதன் தன்னுடைய நாவைக் காத்துக் கொண்டால் அல்லா அவனுடைய மானத்தைக் காத்துக் கொடுப்பான். இறை வணக்கம் செய்வதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் சிரமமில்லாத ஒரு வணக்கம் உண்டு என்றால் அது மவுனம்தான்.
பேசுவது வெள்ளி என்றால் பேசாமலிருப்பது தங்கமாகும்.
தேவைக்குப் போக மீதிப் பணம் வைத்திருப்பவர் தர்மம் செய்யத் தயங்குகிறார், சேர்த்து வைக்கிறார். ஆனால் தேவையில்லாத பேச்சுக்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
நாவை அடக்கி ஆளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்கு கீழ் படிந்து அது இயங்கட்டும். இதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது.
எனக்குப் பிறகு நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே.
கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன் மீது அல்லா கோபமடைகிறான். அதிகமான பாவங்கள் நாவினால்தான் உண்டாகின்றன.
உன் நாவைப் பேணிக்கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்து. போர்க்களத்தில் அல்லாவுக்காக உயிர்த் தியாகம் சிந்தும் செந்நீரை விட அல்லாவின் பயத்தினால் அழுபவரின் கண்ணீர் பெருமைக்குரியதாகும்.
எவர் அதிகமாக வீண் பேச்சு பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலைமையை அடைவார்.
-நபிகள் நாயகம்.

எந்த மதம் உயர்ந்தது

தங்கள் நிலத்தில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக அருகிலுள்ள ஊர்ச் சந்தைக்கு தங்களது வண்டிகளில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே இருந்த ஒரு ஆலமரத்தினடியில் இளைப்பாறிச் செல்லலாமென்று அந்தப்பக்கம் வந்த விவசாயிகள் பலரும் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம் என்று மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் பேச்சுகளுக்கிடையே அவர்களுக்குள் அவரவர் மதமே உயர்ந்தது என்று விவாதம் வந்தது.சைவ மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் "சிவபெருமான்தான் அனைத்துக்கும் மேலானவர். சைவ மதம்தான் உலகில் உண்மையான சமயம்" என்றார்.வைணவ மதத்தைச் சேர்ந்த இன்னொருவர் "இல்லையில்லை திருமால்தான் பெரியவர். வைணவமே உண்மையான சமயம்" என்றார்."புத்தரை மறந்து விட்டு நீங்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. புத்த மதம்தான் அனைத்திலும் சிறந்தது" என்றார் புத்த மதத்தைச் சேர்ந்த மற்றொருவர்.அவ்வளவுதான் அங்கு கூடியிருந்த மூன்று மதத்தினரும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து தங்கள் மதத்தின் பலத்தைக் காட்டும் வேகத்தில் பேசி, கடைசியில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், "ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள். எது உண்மையான சமயம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதானே?" என்றார்."ஆமாம்" என்றார்கள் அனைவரும்."நீங்கள் கொண்டு வந்திருக்கும் பருத்தியை விற்பதற்காகத்தானே சந்தைக்குச் செல்கிறீர்கள். அங்கு யாருடைய பருத்தி அதிக விலைக்குப் போகும்? சைவருடையதா? வைணவருடையதா? புத்த சமயத்தவருடையதா? உங்களில் யாராவது சொல்லுங்கள் என்று கேட்டார் பெரியவர்."சந்தையில் யாருடைய பருத்தி தரமுடையதாக இருக்கிறதோ அதுதான் அதிக விலைக்குப் போகும். சந்தையில் யாருடைய நிலத்தில் விளைந்தது என்று பார்த்து யாரும் வாங்குவதில்லை" என்று பதிலளித்தார் ஒருவர்."நல்லது" என்ற பெரியவர், "அதே போலத்தான் கடவுளும். நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.எப்படிப் பருத்தி வாங்குபவன் எந்த நிலத்தில் விளைந்தது என்று பார்ப்பதில்லையோ அது போல கடவுளும் சமயம் பார்ப்பதில்லை. யார் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனரோ அவரே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர். அவரைப் பொறுத்தவரை எல்லா சமயமும் ஒன்றுதான். இனி மேலாவது மதத்தின் பெயரால் சண்டை போடாதீர்கள்." என்றார்.இதைக் கேட்ட மும்மதத்தினரும் அமைதியடைந்து அந்தப் பெரியவரை வணங்கி விட்டு ஒற்றுமையாகச் சந்தைக்குக் கிளம்பினர்.

கடவுளைக் காண உதவும் கண்ணாடி

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மிடுக்கும், சொல் துடுக்கும் உடைய மாணவன் சென்றான்.
"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கலாமே'' என்றான்."தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் இல்லை. நூலறிவு படைத்தவன். கடவுள், கடவுள் என்று நீங்கள் கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''"தம்பீ! காண முயலுகின்றேன்.''"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''"இல்லை.''"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் நுகர்ந்திருக்கின்றீரா?''"இல்லை.''"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால் நுகர்ந்ததில்லை; கையால் தொட்டதில்லை; காதால் கேட்டதில்லை; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு இந்த அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்திருந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம் போன்றவர்களைக் காட்சிச் சாலையில்தான் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?''"தேன் பாட்டில்.''"தேன் இனிக்குமா, கசக்குமா?'"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்காக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று கேட்கின்றீரே! உணவுப் பொருள்களிலேயே தேன் முக்கியமானது. இது அருந்தேன், இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காகத்தான் இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.''"தம்பீ! தித்திக்கும் என்றாயே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா? சற்று விளக்கமாகக் கூறு! நீதான் நன்கு படித்த அறிஞனாச்சே!.''மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்."ஐயா! தேனின் இனிமையை எப்படச் சொல்வது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவன்தான் உணர்வான்.''பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்த மருத்துவப் பொருளாகவும் உணவாகவுமுள்ள தேனின் இனிமையையே சொல்ல முடியாது. உண்டவனே உணர்வான் என்கின்றாயே? ஞானப் பொருளாக, அனுபவப்பொருளாகவும் விளங்கும் இறைவனை அனுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்."தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''-என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.மாணவன் வாய் சிறிது அடங்கியது.
"பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் பேசுகிறேன்.''"தம்பீ! சற்று நில். பசி என்றாயே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா?''
"இல்லை.''"என்ன தம்பீ! உன்னைப் படித்த அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டதில்லை, மூக்கால் நுகர்ந்ததில்லை, கையால் தொட்டதில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று சொல்லி உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று இல்லவே இல்லை. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அனுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அனுபவப் பொருள். அதைத் தவம் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.''மாணவன் உடம்பு வியர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்."என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம்! கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?''"என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''"ஆம்! தெரிகின்றன.''"முழுவதும் தெரிகின்றதா?''
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.
"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?''மாணவன் விழித்தான்."ஐயா! பின்புறம் தெரியவில்லை.''"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே. சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''
"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.''"அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்."குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். ''"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்."தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''
அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.
-திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் குட்டிக்கதை.

வியாழன், 29 ஜனவரி, 2009

முத்துக்குமார்

சென்னை 29, ஜனவரி: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் முத்துக்குமார் (வயது 30) என்ற இளைஞர் இன்று தீக்குளித்து மரணமடைந்தார்.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது... இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கூறியபடியே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முத்துக்குமார் இன்று காலை 11 மணியளவில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை - கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த முத்துக்குமார், மாத இதழ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர்.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

பழங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள் எனலாம்.பழங்களில் இரும்புச் சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.சில வகை பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.குறிப்பிட்ட சில பழங்களின் மருத்துவத் தன்மை, அவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மை குறித்து இதில் பார்ப்போம்.ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஆப்பிள் சாறானது, குழந்தைகளின் வயிற்றுப் போக்கை குணமாக்கும்.எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சுப் பழம். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், வலுவையும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழம் மிகவும் நல்லது.சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. ஒரு அவுன்ஸ் அளவு திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீர் தாரைகளில் உண்டாகும் கல் கரையும்.இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் சிறந்தது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி அதிகம் இருப்பதால், உடல் சோர்வை உடனடியாக போக்கும் தன்மை கொண்டது.அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது.புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசிப் பழம் பயன்படுகிறது. உடல்சூடு உள்ளவர்களுக்கு அன்னாசிப் பழம் சாலச் சிறந்தது.சப்போட்டா பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.பப்பாளிப் பழத்தை துண்டுகளாக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாய்ப்பால் அதிகம் சுரக்க பப்பாளிப் பழம் பயன்படுகிறது.வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வர பயன்படுகிறது. எனவே அன்றாடம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுதல் சிறந்தது.

பிச்சை

ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?

பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...

அக்கறை

நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!

டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!

நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!

மனைவியின் எரிச்சல்

கணவன் மனைவி இருவரும் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். இலைகளால் ஆன ஆடை அணிந்த ஒரு பெண்ணின் படத்திற்கு "வசந்த காலம்" என்று தலைப்புக் கொடுத்திருந்தனர்.
அந்தப்படத்தின் அருகே வெகுநேரம் நின்று கொண்டிருந்த கணவரைப் பார்த்து எரிச்சலோடு மனைவி சொன்னாள்.
"நீங்க எவ்வளவு நின்றாலும் இலையுதிர் காலம் வராது, வாங்க போகலாம்"

இரண்டு திருடர்கள்

ஒரு சிறைசாலையில் பசுமாட்டைத் திருடியவனும், தான் வேலை பார்த்த வீட்டில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் திருடியவனும் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஒருநாள் பசுமாடு திருடியவன் கடிகாரம் திருடியவனைப் பார்த்து கேலியாக, "அண்ணே! மணி என்ன ஆகுது?" என்று கேட்டான்.
கேள்வியில் இருந்த கிண்டலைப் புரிந்து கொண்ட கடிகாரத் திருடன், "மாடு கறக்குற நேரமாச்சு அண்ணே...!" என்றான்.

ம‌கி‌ழ்‌ச்‌சி

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

வண்ணத்துப்பூச்சி

ஒரு வண்ணத்துப்பூச்சி பறப்பதற்கு அதன் உடலின் தட்பவெப்பம் 86 டிகிரிக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

எறும்பு

எறும்புகள், மனிதர்களை போலவே தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகளை செய்வதற்கு முன் சோம்பல் முறிக்கும்.

புடவை

மனைவி : ஏங்க எதுத்த வீட்டுக்காரர் அவர் மனைவிக்கு தினமும் புடவை வாங்கிக் கொடுக்கிறார். நீங்களும் தான் இருக்கீங்களே ?

கணவன் : என்னடி செல்லம் செய்ய எனக்கும் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைதான். ஆனா நான் வாங்கிக் கொடுத்தா அவங்க வாங்கிக்குவாங்களோ என்னமோ !

கங்காரு

கங்காரு ஒரே பாய்ச்சலில் ஒன்பது மீட்டர் வரை தாண்டும்.

கொசு

உலகிலேயே கொசுக்கள் இல்லாத நாடு "பிரான்ஸ்"

முதலை

நாக்கை அசைக்க முடியாத ஒரே விலங்கு முதலை.

கிவி

இறக்கை இல்லாத பறவையினம் "கிவி"

அழுவதும் சிரிப்பதும்

அழும்போது தனியாக அழு
சிரிக்கும்போது அனைவரோடும் சிரி
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்
- கவியரசு கண்ணதாசன்

பேசும் முறை

தாயிடம் "அன்பாக" பேசுங்கள்.
தந்தையிடம் "பண்பாக" பேசுங்கள்.
ஆசிரியரிடம் "அடக்கத்தோடு" பேசுங்கள்.
சகோதரரிடம் "அளவோடு" பேசுங்கள்.
சகோதரியிடம் "பாசமாக" பேசுங்கள்.
குழந்தையிடம் "உற்சாகமாக" பேசுங்கள்.
உறவினரிடம் "பரிவோடு" பேசுங்கள்.
நண்பர்களிடம் "உரிமையோடு" பேசுங்கள்.
அதிகாரியிடம் "பணிவோடு" பேசுங்கள்.
தொழிலாளர்களிடம் "மனித நேயத்தோடு" பேசுங்கள்.
அரசியல்வாதியிடம் "கவனமாக" பேசுங்கள்.
கடவுளிடம் " மவுனமாக" பேசுங்கள்.

சொத்தை நகம்

கரிசலாங்கண்ணி கீரையின் சாறை, இலுப்பை இலையுடன் சேர்த்து அரைத்து சொத்தை நகம் மீது பூசி வந்தால் சீக்கிரத்தில் புதிய நகம் வளரும்.

தயக்கம்

தயங்கி தயங்கி நிற்பவனை வாழ்க்கை ஒரு போதும் திரும்பிப் பார்ப்பதில்லை.

கண்ணீர்

கண்ணீர்விட மாட்டேன் கண்ணுக்குள் இருக்கும் நீ மூழ்கிவிடுவாய் என்பதால்

புதன், 28 ஜனவரி, 2009

நாய்க்கடி

நாய் கடித்து விட்டால், எருக்கம் வேரை, எருக்கம் பால் விட்டு அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து மூன்று நாட்களுக்கு கட்டினால் நாய்க்கடி விஷம் முறிந்து விடும்.

வாழ்ந்து காட்டுவோம்

வாழ்ந்து காட்டுவதைப் போன்ற பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை

நாயைக் காணவில்லை

ஒரு நிறுவனத்தின் முதலாளியுடைய நாயைக் காணவில்லை. அவர் தனது உதவியாளரிடம் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்குமாறு கூறினார். அவர் விளம்பரம் கொடுத்த மறுநாள் உதவியாளர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் கொடுத்த விளம்பரம்

"முதலாளி நாயைக் காணவில்லை"

நகரத்திற்கு புதியவர்

புதிதாக நகரத்திற்கு வந்த ஒருவர் ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்கிறார். அதைப் பார்த்த மற்றொருவர், ஐயா இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள், போலீஸ் பார்த்தால் பிடித்துக் கொண்டு போய் விடும் என்றார். அதற்கு அவர்

"விடுங்க தம்பி சும்மா கீழே வீணாகப் போவதுதானே வேண்டுமேன்றால் பிடித்துக்கொண்டு போகட்டும்".

செவ்வாய், 27 ஜனவரி, 2009

கண்தானம்

அன்பே !
என் கண்களை தானம் செய்யப் போகிறேன்
நான் இறந்த பிறகும் நீ வாழ்ந்த இந்த உலகைப்
பார்த்துக்கொண்டிருக்க !!!